Sunday, April 28, 2024

 <script type="text/javascript">var wimageno = 1;

    var kid =389150;</script><script type="text/javascript" src="https://eluthu.com/user/widget/"></script>


Tuesday, March 12, 2024

கை கோர்த்து நடக்க...

 

இரவு 11.00

கை கோர்த்து நடக்க ஆசை

காற்று நுழைய இடம் கொடாமல்

கோர்த்த கைகளினூடே நுழைய

வம்பு செய்த காற்றிடம்

வன்மம் காட்டவில்லை

கையினைச் சற்று இறுக்கினேன்.

வெட்கப்பட்டு விலகிய காற்று

முந்தானையைப் பிடித்திழுத்து

முகத்தில் வெட்கப் பூக்களை மலரச் செய்தது.

பூக்களின் வாசம் அறியக் குனிந்தேன்

எப்படிச் சொல்வேன்?

இதுவரை அறிந்திடாத வாசம்.

Saturday, October 16, 2021

இழப்பு

            சிங்கை வந்துவிட்டதால் தமிழக உறவுகளின் நிகழ்வுகள் அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக் காலங்களில் மட்டுமே என்றாகிவிட்டது. எத்தனையோ விழாக்கள், கொண்டாட்டங்கள், மனத்திற்குப் பிடித்தவை, மனத்திற்கு நெருக்கமானவை இப்படி எத்தனையெத்தனையோ இழந்துவிட்டேன். திரும்பப் பெறமுடியாத பல...

    பளிங்கு விளையாடுவது, தெருவில் உள்ள பிள்ளைகளை அடிப்பது, மிரட்டுவது, அன்பைக் கொட்டிக் கொடுப்பது... துவையல் அரைக்க அம்மியில் வைத்திருக்கும் தேங்காய், பொட்டுக்கடலைகளை, மிளகாயை ஒதுக்கிவிட்டு எடுத்துச் சாப்பிடுவது,

           அம்மா அரைப்பதற்காகக் காயவைத்திருக்கும் மல்லியில் போட்டிருக்கும் பொட்டுக் கடலையை ஒவ்வொன்றாக் பொறுக்கிச் சாப்பிடுவது...

            இப்படி இன்னும் எத்தனை எத்தனை இன்பங்களை இழந்துவிட்டேன். 

            இனி இழப்பதற்கு???

Saturday, September 22, 2018

பூங்கொடி...

பொழுது விடிவதற்கும், இருள் விலகுவதற்குமான ஒரு இடைப்பட்ட நேரம். இரசம் போன கண்ணாடி வழியாகப் பார்ப்பது போன்ற தோற்றத்தில் தூரத்து மரங்களும், காவல் துறை கண்காணிப்பாளர் வீடும், அதைத்தாண்டி அந்த இரண்டு தாணிக்காய் மரங்களும்  சற்று மங்கலாகத் தெரிந்தன.

தாணிக்காய் மரங்களின் அருகிலிருந்த அந்த மாணவியர் விடுதியின் தூக்கக் கலக்கம் இன்னும் தீரவில்லை. அவனைச்சுற்றி அனைத்தும் உறக்கத்தில் இருந்தன. அவனுக்கு மட்டும் உறக்கம் ஓடிப்போக விழிப்பு விழித்துக் கொண்டது.

தங்களில் இளமையோடு உறக்கத்தையும் தொலைத்த முதிர்கன்னிகள் 5.30 மணிக்கே மெல்ல செபமாலையை உருட்டிக் கொண்டே கோவிலுக்கு வரத்தொடங்கிவிடுவார்கள். அவளுந்தான்.. 

அவர்கள் வருவதற்கு முன் கோவிலைச்சுற்றி வைக்கப்பட்டிருந்த தென்னம்பிள்ளைகளுக்குத் தண்ணீர் ஊற்றி முடித்துவிடவேண்டும் என்பது அவனுக்குள் எழுதப்படாத சட்டமாக ஒட்டிக் கொண்டிருந்தது. 

Monday, May 01, 2017

மடையனின் பிள்ளைகளும் மடையர்களே!

சற்றுமுன்னர் ஒருசில சொல்ல முடியாத காரணங்களால் என் மகளும் மகனும் தாங்களும் மடையர்கள் என்பதை மெய்பிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர். நான் சிறிது கோபமாகவே இருந்தேன். ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பக்கம் சற்று கோபமாகத்தான் இருந்தேன்...

வலிய சில காரணங்களை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் அறியாதவாறு கண்காணித்தேன். மடையர்களாகிவிடுவார்களோ என்று எனக்கு உள்ளூர சற்றுப் பயமே... என் அச்சம் உறுதியானது. என் மகன் கொதிக்கும் குழம்பைக் கரண்டியில் எடுத்துக் கொண்டு என் அருகில் வந்தான்...
என்னிடம் தங்களின் திறமையை மெய்பித்து எப்படியும் பாராட்டு வாங்கிவிட வேண்டும் என்பதில் முனைப்பாயிருந்தனர் என் மக்கள்.
கொதிக்கும் பருப்புக் குழம்பின் மனம் மெல்ல என்னை இழுத்தது... நான் என் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டவிரும்பவில்லை.
கையில் கரண்டி, கரண்டியில் கொதிக்கும் குழம்பு.

அப்பா என்று என் மகன் அழைத்தான். அந்த அழைப்பு வழக்கமான அழைப்பல்ல. முகத்தை நேராகக் காட்ட எனக்குச் சிறிது தயக்கம்தான்.

என்ன? - சற்று அதட்டலாகக் கேட்பது போல் நடித்தேன்.
கரண்டியில் இருந்த குழம்பை வாயால் நான்கைந்து முறை ஊதி ஊதி... அதிலும் மனநிறைவடையாமல் என் மகன் அவனுடைய கையில் ஊற்றிப் பார்த்து சூடு ஆறிவிட்டதை உறுதி செய்துகொண்டு என் கையில் கரண்டியில் மீதமிருந்த குழம்பை ஊற்றிவிட்டு எதிர்பார்ப்போடு என் முகத்தைப் பார்த்தான்.
ம்...ம்... நல்லாருக்கு என்றவுடன் மெல்லிய புன்னகையோடு வெற்றி பெற்ற பெருமிதத்தோடு நகர்ந்தான்.

மகளோ எதையுமே காட்டிக் கொள்ளவில்லை... ஒருவித அலட்சியம்... ம்... பருப்புக் குழம்பு வைப்பது என்ன பெரிய கம்பசித்திரமா என்பது போல... அமைதியாக நின்றாள்...
ம்... நான் அமைதியாக நகர்ந்து வந்துவிட்டேன். மடையனின் பிள்ளைகளும் மடையர்களே...
-------------------
(இதில் ஒரு முக்கியமான என் மனத்தைத் தொட்ட பகுதி என்னவெனில்... எனக்குக் கை சுட்டுவிடக்கூடாது என்று எண்ணி என் மகன் தன் கைகளில் ஊற்றிப் பார்த்தபின்னர் என் கையில் ஊற்றிய பாங்கு... )

Saturday, March 11, 2017

வாட்போர்....

இன்று யாரும் எதிர்பார்க்கவில்லை... திட்டமிட்டதைவிட அரைமணி நேரம் தாமதமாகத்தான் போர்க்களத்தினை அடைந்தோம். தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்தோம்... இன்று முழுவதும் வாட்போர்தான் அவரவர் போருக்குத் தயாரானோம்... தக்க உடைகளணிந்து வாட்களைச் சோதனையிட்டு... எல்லாம் முடிந்தது.




தந்தையும் பிள்ளையும் வாட்போரிடுவது என்றுதான் முதலில் சொன்னார்கள். 

பிறகு பிள்ளைகள் ஒருபுறம் தந்தையர் ஒருபுறம் போரிட்டோம்... வெற்றி பெற்ற இரண்டு குழுக்களும் இறுதியாக மோதின...
என்னோடு மோதுவதற்குத் தயாராக இருந்தவர் ஒரு சீன ஆசிரியர். அறிவிப்புக்காகக் காத்திருந்தோம்... அறிவிப்பும் வந்தது... போர் தொடங்கியது.
எதிராளி திறமையானவர்தான். எதிர்ப்பு கடுமையாகத்தான் இருந்தது. முதலில் சற்று யோசித்தேன். எதிரி என வந்தபிறகு யோசிக்கக்கூடாது...
என் மனக்கண் முன்னால் அரசிளங்குமரி ம.கோ.இராவும் நம்பியாரும் வந்தனர்... வாட்போரின் திசை திரும்பியது. டன் டணார், டிங், டிங்...டங்... டிங், டங், டணார், டிங்ங்ங்ங்......

அந்த அணியினரைவிட நான் பத்து புள்ளிகள் அதிகம் பெற்றேன்... போர் முடிந்தது என அறிவிக்கப்பட்டது. இருவரும் கைகுலுக்கி களத்தைவிட்டு வெளியேறி... போருடைகளைக் களைந்தோம்...



குழுவாகப் படம் பிடித்துவிட்டு வெளியே வந்தோம். தந்தை பிள்ளைகளுக்கான நிகழ்ச்சியை வெற்றிகரமாக மகிழ்ச்சியாக முடித்த நிறைவோடு மாணவர்களையும் அவர்களின் தந்தையர்களையும் அனுப்பிவிட்டு வீட்டுக்கு என் மகனுடன் வந்தேன்... நல்லவேளையாக எனக்கும் என் மகனுக்கும் கத்திச்சண்டை நடைபெறவில்லை... 

Wednesday, March 08, 2017

அகில உலக மகளிர் நாளும் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியும்

நான் ஐகப் என்ற மாணவர் அமைப்பில் இருந்த காலகட்டம். தமிழகம் முழுக்க உள்ள கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் அகில உலக மகளிர் நாளுக்காக என்னுடைய தஞ்சாவூரிலுள்ள குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரியில் ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்தது... அந்தக் கல்லூரிதான் தஞ்சாவூரில் பெயர் பெற்ற பெண்கள் கல்லூரி... அதுமட்டுமல்ல அங்கு என்னுடைய அன்பிற்குரியவள் படித்துவந்தாள். அந்தத் துணிவில்தான் அந்தக் கல்லூரி செல்ல ஆசைப்பட்டேன்.
பொதுவாக என்னைப்போன்ற அழகும் அறிவும் ஒருங்கேபெற்ற இளைஞர்கள் அந்தக் கல்லூரிக்குள் சென்று வருவது சற்று ஆபத்தானதும் கூட...
முன்கூட்டியே அந்தப் பெண்ணிடம் அனுமதி கேட்டு நேரத்தை முடிவு செய்து கொண்டேன். உள்ளுக்குள் சற்று அச்சவுணர்வு இருந்தாலும் வெளியில் யாராலும் கண்டுபிடித்திருக்கவே முடியாது.

குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரிக்குள் நுழைந்தேன்... மெல்லிய சீட்டி ஒலி... கேலி, கிண்டல் வினோத ஒலிக் குறிப்புகள்...  என்னை நோக்கித்தான்... ஆங்காங்கே மர நிழல்களில் அழகிய ரோசாக்களும், மல்லிகைகளும். சாமந்திப் பூக்களை... பூக்களை மட்டுமே நட்டு வைத்ததைப் போன்று பெண்கள் அமர்ந்திருந்தனர்.
நேரே அலுவலகத்திற்குச் சென்று பெயரைச் சொல்லி யாரைப் பார்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டேன். சற்று நேரத்தில் மெல்லிய கொலுசொலி... ஒவ்வொரு நாளும் கேட்கும் ஒலி.. சட்டென ஒலிவந்த திசையை நோக்குவதற்குள் ஒளியென என் அருகில் தன் தோழிகளுடன்.
சரி கல்லூரி முதல்வரைப் பார்த்துப் பேசுவதற்கு முன் கீழே போய்வருவோமா என்றாள். குறிப்பறிந்து கீழே சென்றோம். கல்லூரி உணவகத்தில் சூடான தேநீரும், மசால்வடையும் எங்களைத் தேடி வந்தன. எல்லாமே சொல்லி வைத்தது போன்று நிகழ்ந்தது.
வடை சாப்பிடுமுன் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்... நான் தனியாக வந்தபோது என்னைக் கேலி செய்தவர்கள் இப்போது ஒரு சிறு ஓசைகூட எழுப்பவில்லை... அப்போதுதான் அவளுக்கு அந்தக் கல்லூரியில் இருந்த மதிப்பை அறிந்தேன்.
வடை சாப்பிட்டுத் தேநீர் அருந்தியபின் ஒப்புக்காக காசு கொடுக்க முயன்றேன். வேண்டாம் வாங்க என்ற ஒரே வார்த்தை... மறுபேச்சு பேசவில்லை பின்தொடர்ந்தேன்.
இரண்டாம் தளத்திலிருந்த கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்றோம். வருகை தெரிவிக்கப்பட்டது. முதல்வர் அழைத்தார். உள்ளே சென்று அமர்ந்தோம். என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு மகளிர் நாளுக்காக சில நடவடிக்கைகளைச் செய்ய விரும்புவதைத் தெரிவித்தேன். அனுமதி கொடுத்தார். உடனிருந்தவர்களின் சிறப்பது என்பதைச் சொல்லத் தேவையில்லை... கல்லூரி மாணவத் தலைவி மாதங்கியும், பூங்கொடியும் உடனிருந்தனர். கல்லூரிக்குள் பூங்கொடிக்கு இருந்த செல்வாக்கு மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது
பெண்களுக்கான உரிமைகள், பெண் கல்வி முக்கியத்துவம், என ஒருசில சுவரொட்டிகள், துண்டறிக்கைகள். கொடுத்துவிட்டு மாமரத்து நிழலில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றேன்.
சற்றுதூரம் துணைக்கு வரும்படி கேட்டுக் கொண்டேன்... மீண்டும் கேலி கிண்டல் செய்வார்கள் என்ற பயத்தில் இல்லை... இன்னும் சிறிது நேரம் பேசலாமே என்றுதான்...
நான் அந்தக் கல்லூரிக்குள் சென்ற முதல் நிகழ்வு இதுதான். அதன்பிறகு இன்றுவரை அங்கு செல்லும் சந்தர்ப்பம் ஏதும் அமையவில்லை... 

Thursday, November 03, 2016

சீம்பு எனப்படும் தேங்காய்ப்பூ




சாதாரணமாகத் தேங்காயை உடைத்தால் இரண்டு அரைக்கோள வடிவ தேங்காய் மூடிகள் கிடைக்கும். வெள்ளை வெளேரென்று பளிச்சிட்டுச் சிரிக்கும். தேங்காய் நன்றாக முற்றிய பிறகு முளைவிட ஆரம்பிக்கும். தேங்காயின் ஒரு மூடியில் அதன் கண் என்று சொல்லப்படும் துளையை அழுத்தினால் அதிலிருந்து துவரம்பருப்பு அளவில் வரும். அதைத் தின்றால் சுவையாக இருக்கும்.

நன்கு முற்றிய தேங்காயை அப்படியே சில நாட்களுக்கு விட்டுவிட்டால் சிறிய அளவில் குறுத்துவிடத் தொடங்கும். தேங்காயின் உள்ளே அந்தக் குருத்து முட்டை போன்ற வடிவில் வளரத் தொடங்கும்... ஒரு கட்டத்தில் அது தேங்காய் முழுவதும் அடைத்துக் கொள்ளும். அந்தக் காலக்கட்டத்தில் தேங்காயை உடைத்தால் அதனுள் தக்கை போன்று உருண்டை வடிவத்தில் இளம் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் இருப்பதே சீம்பு எனப்படும். சாதாரணமாக இதைத் தேங்காய்ப்பூ என்றுதான் சொல்வார்கள். 03/11/2016 இன்றுதான் முகநூல் தோழி பரிமளாதேவி மூலம் இதன் பெயர் சீம்பு என்று தெரிந்து கொண்டேன். நன்றி.

Wednesday, September 21, 2016

செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி....

21/09/2016  

கொஞ்ச காலத்திற்கு முன்னால் நான் சிறுவனாக இருந்தபோது வானொலியில் பாடல் கேட்பதும் கேட்டுக் கொண்டே குறிப்பேட்டில் அந்தப் பாடலை அதே வேகத்தில் எழுதுவதும் பழக்கம். 

ஒரு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வரை எனக்கு அந்த முழுப்பாடலும் தெரியாது. வானொலியிலும் முழுப்பாடலை ஒலிபரப்பிக் கேட்டதில்லை... 

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
அந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வரை முழுப்பாடல் இவ்வளவுதான் என்று நினைத்திருந்தேன்...
காலை 7.00 என்னிடம் ஒரு தாள் வந்து சேர்ந்தது. அந்தத் தாளில் இந்தப் பாடல் வரிகள். ஆனால் மேலும் ஒரு பத்தி
என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல 
அதிகமாக இருந்தது...

எனக்கு ஒன்றும் புரியவில்லை... பிறகுதான் தெரிந்தது அந்தத் தாளில் எழுதியிருந்ததுதான் முழுப்பாடல் என்று.

இந்த நாளில்தான் எனக்குத் தெரிந்தது... நீயொரு பாதி நானொரு பாதி என்று.... 

Sunday, July 10, 2016

தரமான தஞ்சாவூர் செக்கெண்ணெய்.


தஞ்சாவூர் செக்கெண்ணெய் தோன்றிய வரலாறு...

     இது என் குடும்பத்தினருக்காக, தொடங்கிய முயற்சி... எதிர்காலத் தலைமுறை நலமாக வாழவேண்டும்... நம் பிள்ளைகளுக்கு நாம் நல்லனவற்றைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்த எண்ணெய் ஆட்டும் முயற்சி.

நாம் நம் பாரம்பரியத்தை மறந்ததால் பல்வேறு இன்னல்களை அடைந்து கொண்டுள்ளோம்... வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்பதை மறந்தோம். வாணியனுக்குக் கொடுப்பதை மறந்ததால் இன்று வைத்தியனுக்கு வாரி வழங்கிக் கொண்டுள்ளோம்.

இந்த நிலையை மாற்றவேண்டும் என்று நெடுநாளாக எண்ணிக் கொண்டிருந்தேன்... இன்று நிறைவேறியது. தஞ்சாவூர் செக்கு எண்ணெய். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். ஆம் என் குடும்பத்திற்காகப் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகத் தயாரிக்கப்பட்டதுதான் இந்த நல்லெண்ணெயும், தேங்காயெண்ணெயும்.

என்னுடைய நண்பர் செந்தில் வீட்டில் விளைந்த பல ஆண்டுகளாக செயற்கை உரம் எதுவும் போடாமல் விளைந்த தேங்காய்க் கொப்பரையில் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகக் காயவைத்து தேங்காயெண்ணெய் ஆட்டி எடுக்கப்பட்டது.




சேலத்தில் நண்பர் செல்வமுரளியிடமிருந்து தரமான நல்ல எள் வாங்கி ஆட்டி எடுக்கப்பட்டது நல்லெண்ணெய்.

எல்லாவற்றையும்விட இணையத்தில் நான் பார்த்த மற்ற அனைவரையும் விட எவ்வளவு விலை குறைவாகக் கொடுக்க முடியுமோ அந்த அளவு குறைவாகக் கொடுக்க முயன்றுள்ளேன்.

இது என்னுடைய முதல் முயற்சி... உங்களின் மேலான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இறங்கியுள்ளேன்.

அடுத்தமுறை கட்டாயம் இதைவிட இன்னும் குறைவான விலையில் கொடுப்பேன் என்று உறுதிகூறி உங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி கூறிக் கொள்கின்றேன்.

விலைவிவரம் அனுப்பும் செலவு சேர்த்து.

நல்லெண்ணெய் கருப்பட்டி கலந்து ஆட்டியது 1லி   = ரூ.295/-
தேங்காய் எண்ணெய் 1லி                              = ரூ.200/-
---------------------------------
தஞ்சாவூரில் உள்ளவர்கள் நேரில் வந்து வாங்கிக் கொண்டால் விலையில் பத்து ரூபாய் குறைவு.

பணம் அனுப்ப வேண்டிய வங்கி விவரம்.

ICICI BANK SAVINGS A/C NO 612801076639
Thanjavur IFSC Code: ICIC0006128

(தஞ்சாவூர் தவிர்த்த பிற ஊரில் உள்ளவர்கள் குறைந்தது மூன்று அல்லது ஐந்து லிட்டராக வாங்கினால் அனுப்புவது நல்லது. ஒரு லிட்டர் என்றால் கொரியர்காரர்கள் பொறுப்பில்லாமல் தூக்கிப் போட்டுவிடுகின்றனர்.)        (அண்டை மாநிலங்களுக்கு ஒரு லிட்டர் அல்லது ஒரு கிலோவுக்கு கூரியர் செலவு 30 ரூபாய் கூடுதலாக வரும்)


பொத்தகத் தேனீ



லாங் மிஸ்சிங் லிங் - நூலைக் கண்டுபிடித்து அதைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பவர் தர்சினி சூரியகலா.

பொத்தகத் தேனீ! இந்தத் தலைப்பு! இந்த உவமை இவருக்கு மிகச் சரியாகப் பொருந்தும்... பெங்களூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர் நூல்கள் என்றால் பேயாய் அலைவார். யாருக்கேனும் நூல்கள் தேவைப்பட்டால் இவரை அணுகலாம்... நூல்கள் எந்த மூலைமுடுக்குகளில் இருந்தாலும் இவரிடமிருந்து தப்பமுடியாது... 

இவர் மிகப் பெரிய வலைப் பிண்ணலை உருவாக்கி வைத்துள்ளார். யாரைப் பிடித்தால் எப்படி காரியத்தைச் சாதிக்கலாம் என்று மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளார்.

கடந்த 2013-ஆண்டு சிங்கப்பூர் தமிழாசியர்கள் மதுரைக்குக் கற்றல் பயணம் மேற்கொண்டோம். அப்போது சிறப்புப் பேச்சாளர்களாக ஆயிசா புகழ் இரா.நடராசன், மாலன் போன்றோர் வந்து உரையாற்றினார்கள். அப்போது ஆயிசா கதையை ஆசிரியர்கள் அனைவரும் படித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினோம். குறைந்தது உடனடியா 20 பொத்தகங்கள் தேவைப்படும்... மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர்களின் உதவியோடு பொத்தகக் கடைகளுக்கு அலைந்தேன். பலகடைகளில் அந்த நூலே தெரியவில்லை... தெரிந்த கடைகளில் நூல்கள் இல்லை... ஒன்றும் புரியாத நிலை. உடன் நினைவுக்கு வந்தவர் ஒருவர்தான். ஆனால் அவர் இருப்பதோ பெங்களூரில். நாங்கள் தமிழகத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில். எதுவும் யோசிக்கவில்லை. ஒரே ஒரு முறை அவர் எண்ணை அழுத்தி நிறுத்திவிட்டேன்... (உடனே அழைப்பு வரும் என்று தெரியும்)

உரையாடல் இதுதான்....

- எனக்கு ஆயிசா நூல்கள் 20 வேண்டும். உடனே... என்ன செய்வியோ      தெரியாது. 
-  அவ்வளவுதானே... சரி.. 

-   பத்து நிமிடத்தில் மீண்டும் அலைபேசி ஒலித்தது

-  என்ன?
- பத்து நூல்கள் போதுமா?
- இல்லை 20 கட்டாயம் வேண்டும். (இணைப்பைத் துண்டித்தேன்)

   பத்து நிமிடத்தில் மீண்டும் அழைப்பு. 

- உங்கள் எண்ணை கொடுத்துள்ளேன். காலை உங்களை                             அழைப்பார்கள். 

மறுநாள் காலை நாங்கள் தங்கியிருந்த விடுதியில் என்னிடம் ஒரு பொதியை ஒப்படைத்தார்கள்... திறந்து பார்க்காமலேயே அது பொத்தகம் என்று தெரிந்தது... மதுரையில் இருக்கும் ஒருவரிடமே சொல்லி நூல்கள் எனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார். அனைவருக்கும் ஒரு பிரதியைக் கொடுத்தேன்... கையில் நூலைப் பெற்றுக் கொண்டவுடன் அனைவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும்.
கையில் ஆயிசா நூலுடன் சிங்கபூர்த் தமிழாசிரியர்கள்


எப்படிங்க? நேற்று சொல்லி இன்று கையில் நூல்... எனக்கு இதில் ஆச்சரியம் இல்லை ஏனென்றால் எனக்கு அவரைப்பற்றித் தெரியும்.
இதுமட்டுமல்ல... 

லாங் மிஸ்சிங் லிங் 1931-இல் எழுதப்பட்ட ஆங்கிலநூல். இந்த நூலை ஒருசில ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தேன். என்னுடைய ஆசிரியர் முனைவர் பா.இறையரசன் இதனைக் கேட்டார்... தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற மனிதரிடம் இந்த நூலுக்காகப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தும் அந்த நூல் கிடைக்கவில்லை என்பதை அறிந்தேன். 

இலண்டன் நூலகத்தில் உள்ளது என்று நண்பர்களின் உதவியால் அறிந்தேன். ஆனாலும் நூலைப் பார்க்கக் கூட முடியவில்லை. அமேசான் நிறுவனம் நூல் உள்ளதாக விளம்பரம் செய்துள்ளது. ஆனால் அவர்களிடம் நூல் இல்லை... 

இவரிடம் சொல்லிவைத்திருந்தேன்... கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் எப்படியும் நூலினைக் கண்டுபிடித்துத் தருகின்றேன் என்றார்.

இதற்கிடையில் அ.மாதவையாவின் கிளாரிந்தா நூல்பற்றிய ஒரு குறிப்பினை முகநூலில் படித்தேன். தஞ்சாவூரில் நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவம். நூலைப் படிக்க ஆவல் ஏற்பட்டது. முகநூலில் பகிர்ந்தேன்... சிங்கப்பூர் தமிழாசிரியர்கள் ஒருசிலர் தங்களுக்கும் நூல் வேண்டும் என்று கேட்டனர். 
பெங்களூருக்கு ஒரு அழைப்பு. நான்கு நாளில் வீட்டில் கிளாரிந்தா. 

இப்படி நூல்கள் தொடர்பாக என்ன சொன்னாலும் உடனே எப்பாடு பட்டாவது நிறைவேற்றிவிடுவார்... 

இப்படி கிடைக்காத பல அரிய நூல்களைத் தேடித் தொகுப்பதை மிகவும் விரும்புபவர். 

"மலர்களின் வாசனையைவிட நூல்களின் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று கூறும் இவர், "பயணச் செலவைக் கொடுத்தால் போதும், கிடைப்பதற்கு அரிது என்ற நூல்களை எல்லாம் தேடிச் சேகரித்துக் கொடுப்பேன் என்று கூறுகின்றார். 

ஆச்சரியமானவர். அதிசயமானவரும் கூட... அவர்தான் தர்சினி சூரியகலா.