Wednesday, November 26, 2025

நீண்டகாலச் சேவை விருது. என் பிள்ளைகளுக்குக் காணிக்கை


வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தநாளில் கிடைத்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.

            25 ஆண்டுகள் சிங்கையில் பணியாற்றியமைக்காக... பிரதமர் விருது. அடுத்த மார்ச்சு வந்தால் 29 ஆண்டுகள் முடிந்து முப்பதாவது ஆண்டு தொடங்கும். இந்தக் கால் நூற்றாண்டு சிங்கப்பூர் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன். என் தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் வாழ்த்தினால்தான் சிங்கப்பூர் வந்தேன்.

            சிங்கப்பூர் வேலை உறுதியானவுடன், வெற்றி மகிழ்வன் (விசய் ஆனந். 7 ஆம் வகுப்பு படித்தபோது நான் தொன்போசுகோ பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். அவனுக்கிருந்த தமிழ் ஆர்வம், அந்த ஆர்வத்திற்கு நான் கொடுத்த ஊக்கம் இரண்டும் கலந்தபோது தன்பெயரை வெற்றிமகிழ்வன் எனத் தமிழ்ப்படுத்திக் கொண்டான். அன்றிலிருந்து இன்றுவரை வெற்றி மகிழ்வன் என்றே அழைக்கிறேன்.) சம்பத், குரு ஆகிய மாணவர்கள் என்னை அழைத்துச் சென்று முழுக்கை சட்டை, கழுத்துப்பட்டி, காலணி (இவை சிங்கப்பூருக்கு அவசியம் என்று நினைத்துநினைத்து, பார்த்துப் பார்த்து வாங்கித் தந்தார்கள். அவர்களின் வாழ்த்து என்னை வாழவைக்கின்றது.

            பூண்டி கல்லூரி மாணவனாக இருந்தபோது 1988 ஆம் ஆண்டு புனித அருளானந்தர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக இருந்தேன். முதலாமாண்டு இரண்டாமாண்டு என இரண்டு வகுப்பிலும் 80 மாணவர்கள். அப்போது என்னிடம் பயின்றவர்களில் என்னைவிட வயதானவர்களும் இருந்தனர். என்மீது மிகுந்த அன்புள்ளவர்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கல்வியியில் படித்தவரை பணியில் அமர்த்தினார்கள். நிருவாகத்தினருடன் சண்டை போட்டு எனக்கு விடைநல்கு விழாநடத்தினர். குறிப்பிட்ட தொலைவிலிருந்து விழாமேடைவரை மலர்த்தூவி அழைத்துவந்தனர். மாணவர் தலைவன் சிறில் சோசப்பு என்பவன் மாணவர்கள் சார்பாக ஒரு சிட்டிசன் கைக்கடிகாரத்தை எண்பது மாணவர்களின் இதயத் துடிப்பையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கின்றோம் எனக்கூறிக் கட்டிவிட்டான். அந்த மாணவர்களின் அன்பும் எனப் பலப்பல மாணவர்களின் ஆழமான அன்புதான் என்னை இந்த அளவு வளரச் செய்துள்ளது.

            அடுத்து 1990 ஆம் ஆண்டு வெங்கடேசுவரா பள்ளியில் ஓராண்டு பயின்றேன். ஆம் மாணவர்களிடமிருந்து நான் கற்றதும் ஏராளம். இன்றும் அந்த மாணவர்களில் பலரும் என் தொடர்பில் உள்ளனர். இன்றும் என்னை அழைத்துப் பேசுகின்றனர். அவர்களின் அன்பும் ஆசியும்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

            இந்த இனிய நாளில் அவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து என்னை வளர்து ஆளாக்கிய அத்தனை மாணவர்களுக்கும் இந்த விருதை அன்புடன் காணிக்கையாக்குகிறேன்.
            பலருடைய பெயர்களையும் குறிப்பிட்டுச் சொல்ல ஆசை. ஆனால் இன்று இந்தப்பதிவை வெளியிட வேண்டும் என்ற காரணத்தால் சுருக்கமாகச் சொல்லிமுடித்துவிட்டேன்.
            சிறப்பாக இந்த வேலை கிடைப்பதற்குக் காரணமாக இருந்த என் கல்லூரிநண்பன் புலவர் கோ. நாகேந்திரனுக்கு சிறப்பு நன்றி.

            மேதகு பிறந்த இந்த நாளில் இந்த விருது கிடைத்ததை நான் மிகப்பெரும் பேறாகக் கருதுகிறேன். நன்றி.



Tuesday, April 15, 2025

அம்மா கற்றுக் கொடுத்த பண்டுவம்.



(காலை 8.05)

2010 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். பள்ளி மாணவர்களை அழைத்துக்கொண்டு சுற்றுலா சென்றோம். பாண்டிச்சேரிக்குச் சென்றபோது ஒரு மாணவனுக்கு வயிற்றுப் போக்கு மூன்று நான்கு முறைக்கு மேல் போயிருக்கிறது. என்னிடம் வந்து சொன்னான். அப்போது என்ன சொன்னேன் தெரியுமா? 

அடுத்தமுறை போகும்போது தண்ணீரை அமுக்கிவிடாமல் என்னைக் கூப்பிடு நான் பார்க்க வேண்டும் என்றேன். என்ன ஆசிரியர் இப்படிச் சொல்கிறீர்களே என்றான். டேய் நான் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டேன். என்னை அழைத்துக் காட்டு அவ்வளவுதான் என்றேன். அதேபோல் சிறிது நேரத்தில் மீண்டும் அவனுக்கு வயிற்றுப் போக்கு. என்னைக் கூப்பிட்டான். வெட்கத்தோடு ஒதுங்கி நின்றான். நான் பார்த்தேன். உள்ளே நுழைந்தவுடனேயே புளிச்ச வாடை அடித்தது. நான் சிறிதுகூட முகத்தைச் சுழிக்கவில்லை. எட்டிப் பார்த்தேன். நுரை நுரையாக. செரிமானக் கோளாறு என்பதைத் தெரிந்து கொண்டேன். (இரவு நேரம். புதிய இடம் என்பதால் மருத்துவரை போய்ப் பார்ப்பது சிரமம் என்றார்கள். மருத்துவர் கிடைக்கமாட்டார் என்பதுபற்றி நான் கவலைகொள்ளவில்லை. காரணம்  என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்த கை பண்டுவத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை.)

உடனடியாகக் கொஞ்சம் சீரகம் மிளகு வாங்கி நீரில் போட்டுக் கொதிக்கவைத்துக் கொடுக்கும்படி தங்கியிருந்த விடுதியில் கேட்டேன். பத்து நிமிடத்தில் நான் கேட்டது கிடைத்தது. பையனை எழுப்பிச் சூடாகக் கொஞ்சம் குடிக்க வைத்தேன். அருகிலேயே அமர்ந்து 15-20 நிமிடங்களுக்கு ஒருமுறை என மூன்று நான்கு முறை குடிக்க வைத்தேன். நான் சொல்வது வரை வேறு எதுவும் சாப்பிட வேண்டாம் அமைதியாகப்படுத்து ஓய்வெடு என்றேன். நன்றாகத் தூங்க ஆரம்பித்தவுடன் நானும் அங்கேயே படுத்துக் கொண்டேன். மருந்து கொடுத்தபின் இரவில் தொல்லையில்லாமல் தூங்கினான். காலையில் தெளிவாகிவிட்டான். அம்மா கற்றுக் கொடுத்த மருத்துவம் வென்றது.  சிங்கப்பூரில் என் பிள்ளைகளுக்கு உடல் நலம் கெட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே இல்லை. சிறு காய்ச்சல், தலைவலி, உடல்வலி என்றால் அடுப்படிக்குத்தான் செல்வேன். உயர்தரமான மருந்து நம் சமையலறையில் இருக்கும்போது எனக்கென்ன கவலை?

சிங்கப்பூர் வந்த புதிது. என் வீட்டில் ஒருவன் தங்கியிருந்தான். பெயர் தென்றல். தஞ்சாவூரைச் சேர்ந்தவன்தான். காலையிலிருந்து அவன் நடமாட்டத்தையே காணவில்லை. இரவு அவன் அறையை மெல்லத்திறந்து பார்த்தேன். சுருண்டு படுத்துக் கிடந்தான். என்னடா என்ன ஆச்சி என்றேன். குளிருது அண்ணே என்று பேசவே முடியாமல் பேசினான். தொட்டுப் பார்தேன். காய்ச்சல் மிக அதிகமாக இருந்தது. இரவு நேரம் என்பதால் தனியார் மருத்துவமனைக்குத்தான் செல்லமுடியும். அவன் சம்பாத்தியம் மிகவும் குறைவு என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல அவனுக்கு விருப்பமில்லை. வெளிநாட்டில் வேலை செய்ய வரும் பலரும் தங்களை வருத்தித் துன்பப்படுத்திக் கொண்டு பொருளீட்டித்தான் தாயத்தில் உள்ள உறவினர்களுக்குச் செய்கின்றனர். ஆனால் உறவினர்களின் எண்ணம் வேறுமாதிரி உள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் பணத்தை மரத்திலிருந்து பறித்து அனுப்புகிறார்கள் என்று நினைக்கின்றனர். (என் ஆதங்கம் கொஞ்சம் தலைகாட்டிவிட்டது. பொறுத்தருளவும்.)

ம்... எங்கு விட்டேன். காய்ச்சலிலா? அட காய்ச்சல்தான் இன்னும் விடவில்லையே. கைவசம் இருந்த கோடாலித் தைலத்தை எடுத்து நன்றாகக் கை கால் உடல் முழுவதும் சூடுபறக்கத் தேய்த்துவிட்டேன். மீண்டும் போர்வையை எடுத்து நன்றாகப் போர்த்திவிட்டேன். அப்படியே சற்று வெளியே சென்று கொஞ்சம் வேப்பிலையைத் தேடிப் பறித்துவந்தேன். ஒரு கைப்பிடி வேப்பிலை, பத்து மிளகு, ஒரு பங்கு சீரகம், ஒரு பங்கு ஓமம் எல்லாவற்றையும் மண்சட்டியில் போட்டுத் தீய்த்து இரண்டு சொம்பு தண்ணீர்விட்டுக் காய்ச்சினேன். (இதற்காகவே மண்சட்டி தஞ்சாவூரிலிருந்து பாதுகாப்பாக வாங்கிவந்து வீட்டில் வைத்திருக்கிறேன்.) மூன்றில் ஒருபங்காகச் சுண்டியதும் எடுத்து வடிகட்டி கொஞ்சமாகக் குடிக்க வைத்தேன்.

கோடாலி தைலம் தேய்த்துவிட்டுக் கியாழம் கொடுத்ததும் நன்றாக வியர்த்துக் கொட்டியது. அருகிலிருந்து நன்றாகத் துவட்டிவிட்டேன். ஒருமணி நேரங்கழித்து வடித்த சோற்றில் கொஞ்சம் போட்டு மிளகு சீரகம் கொஞ்சம் போட்டு நன்றாக வேகவைத்து கஞ்சி வைத்துக் குடிக்கக் கொடுத்தேன்.

விருந்தும் மருந்தும் மூன்று வேளை தானே. மெல்ல எழுந்து அமர்ந்தான். மறுநாள் வேலைக்குக் கிளம்பிவிட்டான். குளிர்காய்ச்சலில் நடுக்கிக் கொண்டிருந்தவன் தெளிவாக எழுந்து வேலைக்குச் சென்றதைப் பார்த்தபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.