Wednesday, November 26, 2025

நீண்டகாலச் சேவை விருது. என் பிள்ளைகளுக்குக் காணிக்கை


வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தநாளில் கிடைத்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.

            25 ஆண்டுகள் சிங்கையில் பணியாற்றியமைக்காக... பிரதமர் விருது. அடுத்த மார்ச்சு வந்தால் 29 ஆண்டுகள் முடிந்து முப்பதாவது ஆண்டு தொடங்கும். இந்தக் கால் நூற்றாண்டு சிங்கப்பூர் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன். என் தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் வாழ்த்தினால்தான் சிங்கப்பூர் வந்தேன்.

            சிங்கப்பூர் வேலை உறுதியானவுடன், வெற்றி மகிழ்வன் (விசய் ஆனந். 7 ஆம் வகுப்பு படித்தபோது நான் தொன்போசுகோ பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். அவனுக்கிருந்த தமிழ் ஆர்வம், அந்த ஆர்வத்திற்கு நான் கொடுத்த ஊக்கம் இரண்டும் கலந்தபோது தன்பெயரை வெற்றிமகிழ்வன் எனத் தமிழ்ப்படுத்திக் கொண்டான். அன்றிலிருந்து இன்றுவரை வெற்றி மகிழ்வன் என்றே அழைக்கிறேன்.) சம்பத், குரு ஆகிய மாணவர்கள் என்னை அழைத்துச் சென்று முழுக்கை சட்டை, கழுத்துப்பட்டி, காலணி (இவை சிங்கப்பூருக்கு அவசியம் என்று நினைத்துநினைத்து, பார்த்துப் பார்த்து வாங்கித் தந்தார்கள். அவர்களின் வாழ்த்து என்னை வாழவைக்கின்றது.

            பூண்டி கல்லூரி மாணவனாக இருந்தபோது 1988 ஆம் ஆண்டு புனித அருளானந்தர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக இருந்தேன். முதலாமாண்டு இரண்டாமாண்டு என இரண்டு வகுப்பிலும் 80 மாணவர்கள். அப்போது என்னிடம் பயின்றவர்களில் என்னைவிட வயதானவர்களும் இருந்தனர். என்மீது மிகுந்த அன்புள்ளவர்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கல்வியியில் படித்தவரை பணியில் அமர்த்தினார்கள். நிருவாகத்தினருடன் சண்டை போட்டு எனக்கு விடைநல்கு விழாநடத்தினர். குறிப்பிட்ட தொலைவிலிருந்து விழாமேடைவரை மலர்த்தூவி அழைத்துவந்தனர். மாணவர் தலைவன் சிறில் சோசப்பு என்பவன் மாணவர்கள் சார்பாக ஒரு சிட்டிசன் கைக்கடிகாரத்தை எண்பது மாணவர்களின் இதயத் துடிப்பையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கின்றோம் எனக்கூறிக் கட்டிவிட்டான். அந்த மாணவர்களின் அன்பும் எனப் பலப்பல மாணவர்களின் ஆழமான அன்புதான் என்னை இந்த அளவு வளரச் செய்துள்ளது.

            அடுத்து 1990 ஆம் ஆண்டு வெங்கடேசுவரா பள்ளியில் ஓராண்டு பயின்றேன். ஆம் மாணவர்களிடமிருந்து நான் கற்றதும் ஏராளம். இன்றும் அந்த மாணவர்களில் பலரும் என் தொடர்பில் உள்ளனர். இன்றும் என்னை அழைத்துப் பேசுகின்றனர். அவர்களின் அன்பும் ஆசியும்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

            இந்த இனிய நாளில் அவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து என்னை வளர்து ஆளாக்கிய அத்தனை மாணவர்களுக்கும் இந்த விருதை அன்புடன் காணிக்கையாக்குகிறேன்.
            பலருடைய பெயர்களையும் குறிப்பிட்டுச் சொல்ல ஆசை. ஆனால் இன்று இந்தப்பதிவை வெளியிட வேண்டும் என்ற காரணத்தால் சுருக்கமாகச் சொல்லிமுடித்துவிட்டேன்.
            சிறப்பாக இந்த வேலை கிடைப்பதற்குக் காரணமாக இருந்த என் கல்லூரிநண்பன் புலவர் கோ. நாகேந்திரனுக்கு சிறப்பு நன்றி.

            மேதகு பிறந்த இந்த நாளில் இந்த விருது கிடைத்ததை நான் மிகப்பெரும் பேறாகக் கருதுகிறேன். நன்றி.



Tuesday, April 15, 2025

அம்மா கற்றுக் கொடுத்த பண்டுவம்.



(காலை 8.05)

2010 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். பள்ளி மாணவர்களை அழைத்துக்கொண்டு சுற்றுலா சென்றோம். பாண்டிச்சேரிக்குச் சென்றபோது ஒரு மாணவனுக்கு வயிற்றுப் போக்கு மூன்று நான்கு முறைக்கு மேல் போயிருக்கிறது. என்னிடம் வந்து சொன்னான். அப்போது என்ன சொன்னேன் தெரியுமா? 

அடுத்தமுறை போகும்போது தண்ணீரை அமுக்கிவிடாமல் என்னைக் கூப்பிடு நான் பார்க்க வேண்டும் என்றேன். என்ன ஆசிரியர் இப்படிச் சொல்கிறீர்களே என்றான். டேய் நான் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டேன். என்னை அழைத்துக் காட்டு அவ்வளவுதான் என்றேன். அதேபோல் சிறிது நேரத்தில் மீண்டும் அவனுக்கு வயிற்றுப் போக்கு. என்னைக் கூப்பிட்டான். வெட்கத்தோடு ஒதுங்கி நின்றான். நான் பார்த்தேன். உள்ளே நுழைந்தவுடனேயே புளிச்ச வாடை அடித்தது. நான் சிறிதுகூட முகத்தைச் சுழிக்கவில்லை. எட்டிப் பார்த்தேன். நுரை நுரையாக. செரிமானக் கோளாறு என்பதைத் தெரிந்து கொண்டேன். (இரவு நேரம். புதிய இடம் என்பதால் மருத்துவரை போய்ப் பார்ப்பது சிரமம் என்றார்கள். மருத்துவர் கிடைக்கமாட்டார் என்பதுபற்றி நான் கவலைகொள்ளவில்லை. காரணம்  என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்த கை பண்டுவத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை.)

உடனடியாகக் கொஞ்சம் சீரகம் மிளகு வாங்கி நீரில் போட்டுக் கொதிக்கவைத்துக் கொடுக்கும்படி தங்கியிருந்த விடுதியில் கேட்டேன். பத்து நிமிடத்தில் நான் கேட்டது கிடைத்தது. பையனை எழுப்பிச் சூடாகக் கொஞ்சம் குடிக்க வைத்தேன். அருகிலேயே அமர்ந்து 15-20 நிமிடங்களுக்கு ஒருமுறை என மூன்று நான்கு முறை குடிக்க வைத்தேன். நான் சொல்வது வரை வேறு எதுவும் சாப்பிட வேண்டாம் அமைதியாகப்படுத்து ஓய்வெடு என்றேன். நன்றாகத் தூங்க ஆரம்பித்தவுடன் நானும் அங்கேயே படுத்துக் கொண்டேன். மருந்து கொடுத்தபின் இரவில் தொல்லையில்லாமல் தூங்கினான். காலையில் தெளிவாகிவிட்டான். அம்மா கற்றுக் கொடுத்த மருத்துவம் வென்றது.  சிங்கப்பூரில் என் பிள்ளைகளுக்கு உடல் நலம் கெட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே இல்லை. சிறு காய்ச்சல், தலைவலி, உடல்வலி என்றால் அடுப்படிக்குத்தான் செல்வேன். உயர்தரமான மருந்து நம் சமையலறையில் இருக்கும்போது எனக்கென்ன கவலை?

சிங்கப்பூர் வந்த புதிது. என் வீட்டில் ஒருவன் தங்கியிருந்தான். பெயர் தென்றல். தஞ்சாவூரைச் சேர்ந்தவன்தான். காலையிலிருந்து அவன் நடமாட்டத்தையே காணவில்லை. இரவு அவன் அறையை மெல்லத்திறந்து பார்த்தேன். சுருண்டு படுத்துக் கிடந்தான். என்னடா என்ன ஆச்சி என்றேன். குளிருது அண்ணே என்று பேசவே முடியாமல் பேசினான். தொட்டுப் பார்தேன். காய்ச்சல் மிக அதிகமாக இருந்தது. இரவு நேரம் என்பதால் தனியார் மருத்துவமனைக்குத்தான் செல்லமுடியும். அவன் சம்பாத்தியம் மிகவும் குறைவு என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல அவனுக்கு விருப்பமில்லை. வெளிநாட்டில் வேலை செய்ய வரும் பலரும் தங்களை வருத்தித் துன்பப்படுத்திக் கொண்டு பொருளீட்டித்தான் தாயத்தில் உள்ள உறவினர்களுக்குச் செய்கின்றனர். ஆனால் உறவினர்களின் எண்ணம் வேறுமாதிரி உள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் பணத்தை மரத்திலிருந்து பறித்து அனுப்புகிறார்கள் என்று நினைக்கின்றனர். (என் ஆதங்கம் கொஞ்சம் தலைகாட்டிவிட்டது. பொறுத்தருளவும்.)

ம்... எங்கு விட்டேன். காய்ச்சலிலா? அட காய்ச்சல்தான் இன்னும் விடவில்லையே. கைவசம் இருந்த கோடாலித் தைலத்தை எடுத்து நன்றாகக் கை கால் உடல் முழுவதும் சூடுபறக்கத் தேய்த்துவிட்டேன். மீண்டும் போர்வையை எடுத்து நன்றாகப் போர்த்திவிட்டேன். அப்படியே சற்று வெளியே சென்று கொஞ்சம் வேப்பிலையைத் தேடிப் பறித்துவந்தேன். ஒரு கைப்பிடி வேப்பிலை, பத்து மிளகு, ஒரு பங்கு சீரகம், ஒரு பங்கு ஓமம் எல்லாவற்றையும் மண்சட்டியில் போட்டுத் தீய்த்து இரண்டு சொம்பு தண்ணீர்விட்டுக் காய்ச்சினேன். (இதற்காகவே மண்சட்டி தஞ்சாவூரிலிருந்து பாதுகாப்பாக வாங்கிவந்து வீட்டில் வைத்திருக்கிறேன்.) மூன்றில் ஒருபங்காகச் சுண்டியதும் எடுத்து வடிகட்டி கொஞ்சமாகக் குடிக்க வைத்தேன்.

கோடாலி தைலம் தேய்த்துவிட்டுக் கியாழம் கொடுத்ததும் நன்றாக வியர்த்துக் கொட்டியது. அருகிலிருந்து நன்றாகத் துவட்டிவிட்டேன். ஒருமணி நேரங்கழித்து வடித்த சோற்றில் கொஞ்சம் போட்டு மிளகு சீரகம் கொஞ்சம் போட்டு நன்றாக வேகவைத்து கஞ்சி வைத்துக் குடிக்கக் கொடுத்தேன்.

விருந்தும் மருந்தும் மூன்று வேளை தானே. மெல்ல எழுந்து அமர்ந்தான். மறுநாள் வேலைக்குக் கிளம்பிவிட்டான். குளிர்காய்ச்சலில் நடுக்கிக் கொண்டிருந்தவன் தெளிவாக எழுந்து வேலைக்குச் சென்றதைப் பார்த்தபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

Sunday, November 24, 2024

விரல்மொழியர்: தொடர்புக்கு

விரல்மொழியர்: தொடர்புக்கு: இதழ் குறித்த தங்கள் கருத்துகளையும், தங்களது கேள்விகளையும் இங்கே பதிவிடவும் பெயர் மின்னஞ்சல் முகவரி தங்கள் செய்தி ...

Sunday, April 28, 2024

 <script type="text/javascript">var wimageno = 1;

    var kid =389150;</script><script type="text/javascript" src="https://eluthu.com/user/widget/"></script>


Tuesday, March 12, 2024

கை கோத்து நடக்க...

 

இரவு 11.00

கை கோத்து நடக்க ஆசை

காற்று நுழைய இடம் கொடாமல்

கோத்த கைகளினூடே நுழைய

வம்பு செய்த காற்றிடம்

வன்மம் காட்டவில்லை

கையினைச் சற்று இறுக்கினேன்.

வெட்கப்பட்டு விலகிய காற்று

முந்தானையைப் பிடித்திழுத்து

முகத்தில் வெட்கப் பூக்களை மலரச் செய்தது.

பூக்களின் வாசம் அறியக் குனிந்தேன்

எப்படிச் சொல்வேன்?

நானிதுவரை அறிந்திடாத வாசம்.

Saturday, October 16, 2021

இழப்பு

            சிங்கை வந்துவிட்டதால் தமிழக உறவுகளின் நிகழ்வுகள் அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக் காலங்களில் மட்டுமே என்றாகிவிட்டது. எத்தனையோ விழாக்கள், கொண்டாட்டங்கள், மனத்திற்குப் பிடித்தவை, மனத்திற்கு நெருக்கமானவை இப்படி எத்தனையெத்தனையோ இழந்துவிட்டேன். திரும்பப் பெறமுடியாத பல...

    பளிங்கு விளையாடுவது, தெருவில் உள்ள பிள்ளைகளை அடிப்பது, மிரட்டுவது, அன்பைக் கொட்டிக் கொடுப்பது... துவையல் அரைக்க அம்மியில் வைத்திருக்கும் தேங்காய், பொட்டுக்கடலைகளை, மிளகாயை ஒதுக்கிவிட்டு எடுத்துச் சாப்பிடுவது,

           அம்மா அரைப்பதற்காகக் காயவைத்திருக்கும் மல்லியில் போட்டிருக்கும் பொட்டுக் கடலையை ஒவ்வொன்றாக் பொறுக்கிச் சாப்பிடுவது...

            இப்படி இன்னும் எத்தனை எத்தனை இன்பங்களை இழந்துவிட்டேன். 

            இனி இழப்பதற்கு???

Saturday, September 22, 2018

பூங்கொடி...

பொழுது விடிவதற்கும், இருள் விலகுவதற்குமான ஒரு இடைப்பட்ட நேரம். இரசம் போன கண்ணாடி வழியாகப் பார்ப்பது போன்ற தோற்றத்தில் தூரத்து மரங்களும், காவல் துறை கண்காணிப்பாளர் வீடும், அதைத்தாண்டி அந்த இரண்டு தாணிக்காய் மரங்களும்  சற்று மங்கலாகத் தெரிந்தன.

தாணிக்காய் மரங்களின் அருகிலிருந்த அந்த மாணவியர் விடுதியின் தூக்கக் கலக்கம் இன்னும் தீரவில்லை. அவனைச்சுற்றி அனைத்தும் உறக்கத்தில் இருந்தன. அவனுக்கு மட்டும் உறக்கம் ஓடிப்போக விழிப்பு விழித்துக் கொண்டது.

தங்களில் இளமையோடு உறக்கத்தையும் தொலைத்த முதிர்கன்னிகள் 5.30 மணிக்கே மெல்ல செபமாலையை உருட்டிக் கொண்டே கோவிலுக்கு வரத்தொடங்கிவிடுவார்கள். அவளுந்தான்.. 

அவர்கள் வருவதற்கு முன் கோவிலைச்சுற்றி வைக்கப்பட்டிருந்த தென்னம்பிள்ளைகளுக்குத் தண்ணீர் ஊற்றி முடித்துவிடவேண்டும் என்பது அவனுக்குள் எழுதப்படாத சட்டமாக ஒட்டிக் கொண்டிருந்தது. 

Monday, May 01, 2017

மடையனின் பிள்ளைகளும் மடையர்களே!

சற்றுமுன்னர் ஒருசில சொல்ல முடியாத காரணங்களால் என் மகளும் மகனும் தாங்களும் மடையர்கள் என்பதை மெய்பிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர். நான் சிறிது கோபமாகவே இருந்தேன். ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பக்கம் சற்று கோபமாகத்தான் இருந்தேன்...

வலிய சில காரணங்களை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் அறியாதவாறு கண்காணித்தேன். மடையர்களாகிவிடுவார்களோ என்று எனக்கு உள்ளூர சற்றுப் பயமே... என் அச்சம் உறுதியானது. என் மகன் கொதிக்கும் குழம்பைக் கரண்டியில் எடுத்துக் கொண்டு என் அருகில் வந்தான்...
என்னிடம் தங்களின் திறமையை மெய்பித்து எப்படியும் பாராட்டு வாங்கிவிட வேண்டும் என்பதில் முனைப்பாயிருந்தனர் என் மக்கள்.
கொதிக்கும் பருப்புக் குழம்பின் மனம் மெல்ல என்னை இழுத்தது... நான் என் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டவிரும்பவில்லை.
கையில் கரண்டி, கரண்டியில் கொதிக்கும் குழம்பு.

அப்பா என்று என் மகன் அழைத்தான். அந்த அழைப்பு வழக்கமான அழைப்பல்ல. முகத்தை நேராகக் காட்ட எனக்குச் சிறிது தயக்கம்தான்.

என்ன? - சற்று அதட்டலாகக் கேட்பது போல் நடித்தேன்.
கரண்டியில் இருந்த குழம்பை வாயால் நான்கைந்து முறை ஊதி ஊதி... அதிலும் மனநிறைவடையாமல் என் மகன் அவனுடைய கையில் ஊற்றிப் பார்த்து சூடு ஆறிவிட்டதை உறுதி செய்துகொண்டு என் கையில் கரண்டியில் மீதமிருந்த குழம்பை ஊற்றிவிட்டு எதிர்பார்ப்போடு என் முகத்தைப் பார்த்தான்.
ம்...ம்... நல்லாருக்கு என்றவுடன் மெல்லிய புன்னகையோடு வெற்றி பெற்ற பெருமிதத்தோடு நகர்ந்தான்.

மகளோ எதையுமே காட்டிக் கொள்ளவில்லை... ஒருவித அலட்சியம்... ம்... பருப்புக் குழம்பு வைப்பது என்ன பெரிய கம்பசித்திரமா என்பது போல... அமைதியாக நின்றாள்...
ம்... நான் அமைதியாக நகர்ந்து வந்துவிட்டேன். மடையனின் பிள்ளைகளும் மடையர்களே...
-------------------
(இதில் ஒரு முக்கியமான என் மனத்தைத் தொட்ட பகுதி என்னவெனில்... எனக்குக் கை சுட்டுவிடக்கூடாது என்று எண்ணி என் மகன் தன் கைகளில் ஊற்றிப் பார்த்தபின்னர் என் கையில் ஊற்றிய பாங்கு... )

Saturday, March 11, 2017

வாட்போர்....

இன்று யாரும் எதிர்பார்க்கவில்லை... திட்டமிட்டதைவிட அரைமணி நேரம் தாமதமாகத்தான் போர்க்களத்தினை அடைந்தோம். தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்தோம்... இன்று முழுவதும் வாட்போர்தான் அவரவர் போருக்குத் தயாரானோம்... தக்க உடைகளணிந்து வாட்களைச் சோதனையிட்டு... எல்லாம் முடிந்தது.




தந்தையும் பிள்ளையும் வாட்போரிடுவது என்றுதான் முதலில் சொன்னார்கள். 

பிறகு பிள்ளைகள் ஒருபுறம் தந்தையர் ஒருபுறம் போரிட்டோம்... வெற்றி பெற்ற இரண்டு குழுக்களும் இறுதியாக மோதின...
என்னோடு மோதுவதற்குத் தயாராக இருந்தவர் ஒரு சீன ஆசிரியர். அறிவிப்புக்காகக் காத்திருந்தோம்... அறிவிப்பும் வந்தது... போர் தொடங்கியது.
எதிராளி திறமையானவர்தான். எதிர்ப்பு கடுமையாகத்தான் இருந்தது. முதலில் சற்று யோசித்தேன். எதிரி என வந்தபிறகு யோசிக்கக்கூடாது...
என் மனக்கண் முன்னால் அரசிளங்குமரி ம.கோ.இராவும் நம்பியாரும் வந்தனர்... வாட்போரின் திசை திரும்பியது. டன் டணார், டிங், டிங்...டங்... டிங், டங், டணார், டிங்ங்ங்ங்......

அந்த அணியினரைவிட நான் பத்து புள்ளிகள் அதிகம் பெற்றேன்... போர் முடிந்தது என அறிவிக்கப்பட்டது. இருவரும் கைகுலுக்கி களத்தைவிட்டு வெளியேறி... போருடைகளைக் களைந்தோம்...



குழுவாகப் படம் பிடித்துவிட்டு வெளியே வந்தோம். தந்தை பிள்ளைகளுக்கான நிகழ்ச்சியை வெற்றிகரமாக மகிழ்ச்சியாக முடித்த நிறைவோடு மாணவர்களையும் அவர்களின் தந்தையர்களையும் அனுப்பிவிட்டு வீட்டுக்கு என் மகனுடன் வந்தேன்... நல்லவேளையாக எனக்கும் என் மகனுக்கும் கத்திச்சண்டை நடைபெறவில்லை... 

Wednesday, March 08, 2017

அகில உலக மகளிர் நாளும் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியும்

நான் ஐகப் என்ற மாணவர் அமைப்பில் இருந்த காலகட்டம். தமிழகம் முழுக்க உள்ள கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் அகில உலக மகளிர் நாளுக்காக என்னுடைய தஞ்சாவூரிலுள்ள குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரியில் ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்தது... அந்தக் கல்லூரிதான் தஞ்சாவூரில் பெயர் பெற்ற பெண்கள் கல்லூரி... அதுமட்டுமல்ல அங்கு என்னுடைய அன்பிற்குரியவள் படித்துவந்தாள். அந்தத் துணிவில்தான் அந்தக் கல்லூரி செல்ல ஆசைப்பட்டேன்.
பொதுவாக என்னைப்போன்ற அழகும் அறிவும் ஒருங்கேபெற்ற இளைஞர்கள் அந்தக் கல்லூரிக்குள் சென்று வருவது சற்று ஆபத்தானதும் கூட...
முன்கூட்டியே அந்தப் பெண்ணிடம் அனுமதி கேட்டு நேரத்தை முடிவு செய்து கொண்டேன். உள்ளுக்குள் சற்று அச்சவுணர்வு இருந்தாலும் வெளியில் யாராலும் கண்டுபிடித்திருக்கவே முடியாது.

குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரிக்குள் நுழைந்தேன்... மெல்லிய சீட்டி ஒலி... கேலி, கிண்டல் வினோத ஒலிக் குறிப்புகள்...  என்னை நோக்கித்தான்... ஆங்காங்கே மர நிழல்களில் அழகிய ரோசாக்களும், மல்லிகைகளும். சாமந்திப் பூக்களை... பூக்களை மட்டுமே நட்டு வைத்ததைப் போன்று பெண்கள் அமர்ந்திருந்தனர்.
நேரே அலுவலகத்திற்குச் சென்று பெயரைச் சொல்லி யாரைப் பார்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டேன். சற்று நேரத்தில் மெல்லிய கொலுசொலி... ஒவ்வொரு நாளும் கேட்கும் ஒலி.. சட்டென ஒலிவந்த திசையை நோக்குவதற்குள் ஒளியென என் அருகில் தன் தோழிகளுடன்.
சரி கல்லூரி முதல்வரைப் பார்த்துப் பேசுவதற்கு முன் கீழே போய்வருவோமா என்றாள். குறிப்பறிந்து கீழே சென்றோம். கல்லூரி உணவகத்தில் சூடான தேநீரும், மசால்வடையும் எங்களைத் தேடி வந்தன. எல்லாமே சொல்லி வைத்தது போன்று நிகழ்ந்தது.
வடை சாப்பிடுமுன் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்... நான் தனியாக வந்தபோது என்னைக் கேலி செய்தவர்கள் இப்போது ஒரு சிறு ஓசைகூட எழுப்பவில்லை... அப்போதுதான் அவளுக்கு அந்தக் கல்லூரியில் இருந்த மதிப்பை அறிந்தேன்.
வடை சாப்பிட்டுத் தேநீர் அருந்தியபின் ஒப்புக்காக காசு கொடுக்க முயன்றேன். வேண்டாம் வாங்க என்ற ஒரே வார்த்தை... மறுபேச்சு பேசவில்லை பின்தொடர்ந்தேன்.
இரண்டாம் தளத்திலிருந்த கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்றோம். வருகை தெரிவிக்கப்பட்டது. முதல்வர் அழைத்தார். உள்ளே சென்று அமர்ந்தோம். என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு மகளிர் நாளுக்காக சில நடவடிக்கைகளைச் செய்ய விரும்புவதைத் தெரிவித்தேன். அனுமதி கொடுத்தார். உடனிருந்தவர்களின் சிறப்பது என்பதைச் சொல்லத் தேவையில்லை... கல்லூரி மாணவத் தலைவி மாதங்கியும், பூங்கொடியும் உடனிருந்தனர். கல்லூரிக்குள் பூங்கொடிக்கு இருந்த செல்வாக்கு மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது
பெண்களுக்கான உரிமைகள், பெண் கல்வி முக்கியத்துவம், என ஒருசில சுவரொட்டிகள், துண்டறிக்கைகள். கொடுத்துவிட்டு மாமரத்து நிழலில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றேன்.
சற்றுதூரம் துணைக்கு வரும்படி கேட்டுக் கொண்டேன்... மீண்டும் கேலி கிண்டல் செய்வார்கள் என்ற பயத்தில் இல்லை... இன்னும் சிறிது நேரம் பேசலாமே என்றுதான்...
நான் அந்தக் கல்லூரிக்குள் சென்ற முதல் நிகழ்வு இதுதான். அதன்பிறகு இன்றுவரை அங்கு செல்லும் சந்தர்ப்பம் ஏதும் அமையவில்லை...